Sunday 4 June 2017




ஞானப்பிரகாசம் ஸ்தபதி: தமிழ் நவீன ஓவியத்தின் அடையாளம்.


               publishing in Pudhuezuthu magazine
                             Thank you: Manonmani Pudhuezuthu

யாழன் ஆதி


(ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

மேற்கு வானத்தின் இளஞ்சிவப்பு நிறத்தைத் தோற்கடித்து நீலம் நீர்வண்ணம், தாளில் பரவுவதைப் போலப் பரவுகிறது. அதன் ஆளுகையில் வானம் பெரிய ஓவியப்பரப்பாகத் திரள, மேகங்கள் தங்கள் ஓவியங்களை நிர்மாணம் செய்ய ஆரம்பிகிக்கின்றன. தன்னுள்ளத்திலோ அல்லது அருகிலிருக்கும் அம்மாவிடத்திலோ அந்தக் குழந்தை மேகத்தின் தன்னிலை ஓவியத்தைப் பார்த்து அதற்குத் தெரிந்த உருவத்தின் ஞாபகத்தில் ஒன்றைச் சொல்ல அந்தக்குழந்தைக்கு ஓவியம் அறிமுகமாகிவிடுகிறது.

ஓவியங்களை மனித மனத்தில் இயற்கையின் கைகளே முதலில் வரைகின்றன. மாறும் வானத்தின் வண்ணங்களும், பூக்களின் வண்ணங்களும், இயற்கையின் பேராற்றலால் தோன்றும் வடிவங்களும் ஓவியங்களின் முன்மாதிரிகள் என்ற நிலையில் ஓவியம் இயற்கையானது என்பதும் அதனால்தான் அந்தக் காலத்தில் எழுத்துக்கள் ஓவியங்களாக இருந்தன என்றும் நாம் அறியலாம். ஆக எழுத்துக்கு முந்திய ஒரு இயற்கைக் கலை வடிவ வெளிப்பாடு ஓவியம்.

ஒரு படைப்பாளனுக்குத் தன் படைப்பின்மீது குவிகிற கண்களும் அந்த கண்களின் வழி வழிகிற தன் ஓவியங்களும் மிகவும் முக்கியமானவை. அது ஒரு எழுத்தாளனுக்கு நேரக்கிடைக்காத அம்சம். ஓர் ஓவியம் தன்னளவில் ஆற்றக்கூடிய வேதியியல் மாற்றத்தை வேறு எந்தக் கலைவடிவமும் ஆற்றிவிட முடியாது. அத்தகைய வலிமை வாய்ந்த அந்த வடிவத்தைக் கையாளும் படைப்பாளியின் நுணுக்கமானப் பார்வையும் அவர் கடத்துகிற நுண்ணரசியலும் மிகவும் ஆற்றலுற்றவை. ஒவ்வொரு நாட்டிலும் அத்தகைய ஓவியக்கலைஞர்கள் தங்கள் படைப்புலகத்தை ஒரு கலகச் செயல்பாடாக மாற்றியிருப்பதை வரலாற்றின் வழிநெடுக நாம் காணலாம்.

தமிழிலும் அப்படியொரு பட்டியல் உண்டு.ஓவியத்தில் தீவிரமாக இயங்கக் கூடிய படைப்பாளிகள் காட்டும் உலகம் அவர்களின் பார்வையைத் தாண்டியதாக நிகழும் அரசியல் வெளிகளைத் தன்னுள் வாங்கி அதுதரும் வண்ணங்களின் வெளியில் தன்னை நிகழ்த்தும் கலைஞர்கள் தமிழுலகத்திலும் காலத்திற்கேற்ப வந்து கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிகைகள் நகர்ந்து வெகுஜன அமைப்பையும் அடக்கத்தினையும் கொண்டு நடுத்தன்மை ( Middle ) என்ற நிலையை அடைந்திருக்கும் இச்சூழலில் வெளிவரும் ஒரு சில சிறந்த இதழ்களில் தன் வெளிப்பாட்டை ஓவியங்களாக ஆற்றிக்கொண்டிருக்கிறார் ஞானப்பிரகாசம் ஸ்தபதி .

ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல நிலைகளில் பார்வையாளரை அவரளவில் மீள் உருவாக்கம் செய்து படைப்பாளித் தன்மயுடன் மாற்ற வல்லவவையாக இருக்கின்றன. பல இதழ்களின் வெளிப்படும் அவரின் கலையாக்கங்கள் மிகவும் உன்னதமாக தமிழ் ஓவியப்பரப்பில் அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்கான பலங்கள் மிகுந்ததாக மாறிக்கொண்டிருக்கின்றன.

ஒரு கதைக்கோ அல்லது கவிதைக்கோ அந்தந்தப் படைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களையோ அல்லது கருவினையோ நேரிடையான ஓவியங்களாக மாற்றிவிடும் தன்மையுடன் ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள் அமைவதில்லை என்பது அவரின் தனித்தன்மை. அந்தக் கதையை அல்லது கவிதையை உள்வாங்கிக் கொண்டு ஓவியமாக வெளிப்படும் தன் சிந்தனைகளை அவர் தன் விரல்கள் வழியே வழியவிட நமக்குக் கிடைக்கும் பிரதிகள் தனித்தன்மையாக மாறிவிடுகின்றன.யதார்த்தவாதக் கதைச்சொல்லலுக்குக் கூட ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியம் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்றிவிடும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.


அவரின் படைப்புகள் பெரும்பாலானவை கோடுகளால் உதிர்க்கப்படுகின்றன. தன் ஓவியங்களில் அவருக்கு இருக்கும் வேட்கையின் அளவுகளாக அவர் ஓவியங்கள் இருக்கின்றன. மனிதர்களையும் மிருகங்களையும் இணைத்து அவர் காட்டும் ஓவிய வெளிகள் பார்வையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றன. ஓவியப்பிரத்தியின் எந்த இடத்திலும் தொடங்கிவிடும் மனித உருவம் அது காட்டும் தன்மையின்மூலமாக அந்த உடலில் எழும் வாசனையோ கவிச்சியோ அல்லது காமமோ ஆன்மீகமோ ஓவியத்தின் மீதிப்பகுதியில் வந்து சேர்ந்துவிடுகிற லாவகம் ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவிய வலிமையாக மாறிவிடுகின்றன. கருப்பு வெள்ளைப் பகுதிகளாக அவரின் ஓவியங்கள் சில இருண்மைகளைப் பொதித்துக் கொண்டு பார்வையாளருக்குக் காட்டும் காட்சிகள், கோட்டின் அடர்த்தியும் மெலிவும் சிலநேரங்களின் நிகழ்த்தும் கலவைகள் மனதிற்குள் சென்று பார்வையாளரை கிறங்க அடிக்காமல் அவரை மீண்டும் ஓவியத்தைப் பார்க்க வைக்கின்ற கோரலை அவர் ஆக்கம் செய்துவிடுகிறது.

                                              ( ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி)



நீக்ரோ மக்கள் தங்கள் விடுதலைக்கு அவர்கள் உடல்களையே ஆயுதமாகப் பயன்படுத்தியதைப் போல, பெண்கள் தங்கள் உடலை வைத்து விடுதலை அரசியலைப் பேசுவதைப் போல ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள் எங்காவது ஓரிடத்தில் மனித உடலைக் கொண்டு இயங்கக்கூடியனவாக இருப்பது அவருடைய தனிப்பான்மை. மனித உடல்மூலம் அவர் வெளிப்படுத்தும் அவலங்கள் அல்லது வேட்கைகள் பார்வையாளனுக்கு அதுவரை கிடைத்திராத அனுபவத்தைத் தரக்கூடியன.

படம் எடுக்கும் பாம்பின் உருவத்தோடு சற்றுப் பொருந்துகிற முக அமைப்பும் கழுத்து பாம்புன் வாலாகவும் கைகள் பாம்பாகவும் உடல் ஆணுடலின் உறுதியோடும் ஆனால் இரண்டு முலைகளோடும் கால்கள் உணர்நீட்சிகளாகவும் அமைந்திருக்கும் ஓர் ஓவியம் சர்ரியலிசத்தின் மிக முக்கியச் சாட்சியாக நாம் கொள்ளக் கூடியது. இந்த உருவம் காட்டுகின்ற படிமம் ஒரு கவிதையின் புனைவில் சொல்ல முடியாததாக அதே நேரத்தில் அத்தகைய வீரியம் மிக்கதாக ஓவியத்தில் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஓவியத்தை ஒரு பார்வையாளர் எப்படி எதிர்கொள்வார்? அவருடைய மனநிலையை ஓர் அமானுஷ்யத்தன்மைக்குத் தள்ளி, இத்தகைய ஒவியம் காட்டும் பிம்பம் அவர் சார்ந்ததாக அல்லது அவருடைய இயல்பானதாக அல்லது அவர் பார்த்திராத கேட்டறிந்தவற்றை அசையாக நினைவு வாய்கள் மெல்லுவதற்கு சாதகமாக அமைகின்றன. ஆண் பெண் கொண்ட உருவ அமைப்பு உலகின் பூர்வாங்க ஆற்றலாக வெளிப்படும் பிரபஞ்சத்தின் கதிர்களை தன்னுள் வாங்கி வாழும் மானுட சமூகத்தின் இருப்பாகவும் தலையும் கைகளையும் பாம்பாக அவர் வைத்திருப்பது ஆதியின் ஓலமாக இருக்கின்ற பாம்பின் நீட்சியில் மனிதர்கள் தொடர்ந்த எச்சமாக இருக்கின்ற சிந்தனைகளும் செயல்களும் சுட்டப்பட்ட ஓர் ஆன்மீகத்தின் வெளிப்பாடாக அந்த ஓவியம் அமைந்திருக்கிறது.

புலியின் பின்னணியில் ஒரு ஆதிவாசிப் பெண் ஓவியம். பெண் இந்த பூமியின் முதலாக இருக்கின்றாள். அவளே ஆதிகாட்டின் தாயாகவும் அவளே அவற்றையெல்லாம் பரிபாலிக்கும் நிறைசூலியாகவும் எப்போது இருந்திருக்கிறாள். ஆனால் காலத்தின் மிக் அண்மையில் அவள் இந்தச் சமூகத்தில் எத்தகைய நிலையில் இருக்கிறாள் என்பதை மிகவும் தத்ரூபமாய்க் காட்டும் ஓவியம் அது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் கர்வமும் உருவ அமைப்பும் பின்னணியிலிருக்கும் புலியின் பயமும் பெண்ணே உலகின் ஆகப்பெரும் சக்தி என்பதைக் காட்டுகின்ற காலத்தின் முட்களாக இருக்கின்றது. பெண்நிலைப் பயணத்தில் இன்று பெண்களின் நிலையை இந்த ஓவியம் தன் இருப்பைத்தாண்டி பேசுகிறது. தலை கவிழ்ந்து நாக்கு நீண்ட புலி அந்த ஆதித்தாயின் வீரத்திற்குள் அடிபணிந்திருக்கிறது, வீரமும் நிமிர்வும் மதர்ப்பும் நிறைந்த பெண் சித்திரம் வெற்றிக் களிப்பில் இருக்கிறது. இந்த ஓவியம் ஓரளவு நேரடித்தன்மைக் கொண்டிருந்தாலும் அதில் இருக்கும் கருமையாக்கப்பட்ட இடங்களும் ஒளியூட்டப்பட்ட இடங்களும் நிகழ்த்தும் முரண் நிலையில் அந்த ஓவியம் அதற்கான இடத்தை அடைந்திருக்கிறது.


( ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி)




ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள் நாம் காணவேண்டிய மிக முக்கிய அம்சம் கைகளை அவர் பயன்படுத்தும் தன்மை. அவரின் கைகள் மிகவும் வலிமையானவையாக இருக்கின்றன. ஒரு ஓவியத்தில் விரல்கள் மடக்கி நிலத்தில் ஊன்றுவதைப் போன்ற வலிமையுடன் ஓவியம் மிக அருகில் (Close up) இருந்து தொடங்கி அந்தக் கை ஓர் அருவமாக மாறியிருக்கும். இந்தக் கைகயும் அது ஊன்ற எத்தனிக்கும் நிலமும் பேசும் நுண்ணர்சியலை எப்படி வேண்டுமானாலும் விளங்கிக்கொள்ள முடியும். இத்தகைய வலிமை உள்ள கை ஊன்றுவதற்கு நிலமற்ற தேசத்தில் அந்தக் கையின் உடலும் மற்றவைகளும் அருபமாய் மாறிவிடுவது ஓவியத்திற்குள் அவர் வைத்திருக்கும் ஒரு போராட்டத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது.

ஒரு ஓவியம் காலின் வலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அந்தக் காலே ஒரு மனித உருவமாக மாறி, அதன் வயிறு வெடித்து அந்தத் திசையிலிருந்து குழந்தைப் போன்ற ஓர் அருவம் தோன்றி அந்த ஓவியம் நிகழ்த்துகிற கலைவெளிப்பாடு அற்புதமானது. கால்களும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்களில் அதிகமாக இடம்பெறுகின்றன. நிலத்தில் பதிந்த ஒற்றைக்கால் அதற்குமேல் இரு உடல்கள் இணைந்திருக்கும் ஓவியம் புலப்படுத்தும் பிரதிமைகள் கற்பனையின் மீநிலையில் இருக்கின்றன.

ஒரு மானும் ஒரு மனிதனும் இருக்கிற ஓவியம் சிறந்த ஒன்று. கோடுகள் ஓர் ஓவியத்திற்கானக் கூறுகளைக் கொண்டிருக்க, அதற்குள் அவர் பயன்படுத்தும் நிழல் பிரதேசங்கள் இன்னொரு ஓவியத்திற்கானக் கூறுகளோடு இயங்குகிறது. ஞானப்பிரகாசம் கருமையைப் பயன்படுத்துகிற விதம் அவரின் ஓவியங்களை மேலும் வலிவுள்ளதாக மாற்றுகின்றன. அதே நேரத்தில் நவீன ஓவியபாணியில் ஒரு முக்கியமான இடத்தையும் அவருக்குத் தருகின்றன. ஒரு பெண் கோட்டுருவம். மிக எளிமையாகக் கோடுகளைக் கொண்டது. அதற்கு பின்னால் கருமையில் ஒரு மனித உருவம் தோன்றும். அதற்குக் கீழே ஆணுடைய முகம். மூக்கின் வழியாகச் செல்லும் கோடு வளர்ந்து ஓர் ஓவியமாகி முன்னிருக்குமிரு உருவங்களையும் அது கண்காணிக்கும் ஓரு உருவமாய் மிதக்கும். இந்த ஓவியம் மனசாட்சியின் வரைபடமாகக் காட்சியளிக்கிறது. மனிதர்கள் இந்த வாழ்வில் அடைய வேண்டிய அமைதி, அமைதியின்மை. வறுமை செல்வம். பிறப்பு இறப்பு என்னும் இருமையில் வாழ்வெ அங்கிங்கு என்று அல்லாடும் சூழலில் கொஞ்சம் கோடுகளையும் கருமையயும் வைத்து அதைக் கூறிவிடுவது மிக அருமையான ஓவியமாகத்தான் இருக்கும்.


( ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி)



சிவபெருமானை அவதானிக்கும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி உணர்வுநிலை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கன. ஆண்பெண் உடல்களடங்கிய சிவநாதன் ஓவியங்கள் சிவனின் ஆன்மீகத் தன்மையை மீறி, இந்த உலகம் இயங்கும் முரண் அமைப்புகளைப் பேசுவதாகவும், ஆண் வயிற்றிலிருந்து பெண் வயிற்றிற்கு உயுரணுக்களைத் துப்பும் படைப்பின் அதீதமும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகின்றன. இன்மை இருப்பு என்னும் தன்மைகளில் இன்மைகளை கருப்பாகவும் இருப்பை கோடுகளாகவும் காட்டும் அவரின் கூர்தன்மையனவாக வாய்த்திருக்கின்றன.

ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள் அனைத்தும் அவரின் உணர்வுநிலையிலிருந்து உருவாக்கப்படுவையாக நம்மால் கணிக்க முடியும். கதை, கவிதை என எல்லாவற்றையும்விட ஓவியத்தை படைப்பின் மூலாதாரமாக மாற்றும் அவரின் தன்மை இன்றையத் தமிழ் சிறுபத்திரிகைகள் மட்டுமல்ல நவீனத்தினை வேண்டும் அனைத்து பத்திரிகைகளிலும் தொடர்ந்து வெளிவருவது என்பது மிகவும் நல்லதாகவே படுகிறது.

நுண்மை நிறைந்த அவரின் ஓவியங்கள் அவரின் முந்தையத் தலைமுறைக்கும் அவரின் பிந்தைய தலைமுறைக்கும் ஒரு தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. அவரின் கோடுகள் வேயும் கைகள் தமிழிலக்கிய புலத்தில் மட்டுமல்ல உலக அளவிலான ஓவியங்களின் வரிசையிலும் நிறுத்தப்பட வேண்டியவை என்பதனை அவரின் ஓவியங்கள் தொடர்ந்துப் பேசி வருகின்றன. ஞானப்பிரகாசம் ஸ்தபதி தமிழ் நவீன ஓவியத்தின் அடையாளம்.


மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...