Friday 3 November 2017

                                                    

                                                     சபரிநாதன் இரு கவிதைகள்
                                                       ========================
                                            

(Painting - Gnanaprakasam Sthabathy)



காந்தி ஆசிர்வதிக்காத குழந்தைகள்
  -------------------------------------------
அட்டனக்கால் போட்டபடி இது என் தாத்தா சொல்லியது:
எனையள்ளி எடுத்துக்கொண்டு ஓடினார் என் தாத்தா
ரயிலடியில் இன்னும் அதிர்ந்துகொண்டிருந்தது தண்டவாளம்
ரயிலோ காந்தியை ரொம்ப தூரம் கடத்திப் போய்விட்டது
என் தாத்தா ஒரு சர்பத் குடித்துவிட்டு
வந்து கொத்தத் தொடங்கினார் மீதி அம்மிக்கல்லை.

அவர் மட்டும் கொஞ்சம் விரசாய் ஓடியிருந்தால்
அவர் மட்டும் கொஞ்சம் தாமசித்திருந்தால்..
இப்படித்தான் எல்லோருமாய் சேர்ந்து
நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார்கள்.




                                                               அன்பின் வழியது
                                                           ------------------------------
எனை நேசி என்பதை
எத்தனை சத்தமாக சொல்ல வேண்டியுள்ளது
தொலை மரத்திலிருந்து பட்சிகள் பதைத்து பறக்கும் அளவுக்கு
கார் கண்ணாடிகள் கீறல் விட
சீதனச் சின்னங்கள் விழுந்துடைய
மற்றெல்லோரும் காதைப் பொத்திக் கொள்ளும்படி
அத்தனை சத்தமாக, நாம் சொல்வதை நாமே கேட்கமுடியவில்லை.

ஒருவரை அடிமை செய்வதற்கு
எத்தனை முறை காலில் விழுவது
தாகத்தின் நீச்சு நமைத் தாண்டி உயர்கையில்
ஆக்ஸிஜன் உருளையைக் கட்டிக்கொண்டு சுவரேறி குதிக்க வேண்டும்
பரிசுப்பொருட்கள் குட்டிக்கரணம் உண்ணாவிரதம்
வாக்குறுதிகள் பொய்கள் அழுகை பாவனை அரக்கு முத்தங்கள்
ஒன்று அடிமையாக வேண்டும் அல்லது அப்படி நடிக்க வேண்டும்.

அன்பைப் பரிசோதித்துப் பழகியிராத
பால்கன்னி ஆடுகளின் காலம் அது
கால் ஊன்றிய பதமழை இரவு
நானும் தம்பியும் படுத்துக்கொண்டோம்.அம்மா வந்து
ஒரு பழைய சேலையால் எம்மிருவரையும் போர்த்தினாள்
அப்பொழுது நான் நினைத்தேன் இனி
எந்தப் பேய்களும் எமை அண்டமுடியாது என்று.






மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...